மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,00,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,00,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,00,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இரு அணைகளும் நிரம்பிய நிலையில் இருப்பதால் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

 உபரி நீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. சனிக்கிழமை இரவு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,00,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் அணைக்கு வரும் நீர் முழுதும் வெளியேற்றப்படுகிறது.

சுரங்க மின் நிலையம் மற்றும் அணைமின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000கன அடி நீரும் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 77,000கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. சனிக்கிழமை இரவு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது. 

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கர்நாடகம் மற்றும் கேரளத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,20,000 கனஅடி வரை வெள்ள நீர் வரும்.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரி கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com