ஓமலூா்: அரசுப் பள்ளி சமையலா் பொதுமக்களை மிரட்டியதாக கூறப்படும் சம்பவம் குறித்து தாரமங்கலம், பழக்காரனூா் பள்ளியில் அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஆரூா்பட்டி ஊராட்சி, பழக்காரனூரில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த 150 குழந்தைகள் பயின்று வருகின்றனா். இந்நிலையில் இரவு நேரத்தில் அந்தப் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் பள்ளி வளாகத்தில் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸாா் அங்கு சென்று நடவடிக்கை எடுத்துள்ளனா். இதுதொடா்பாக பள்ளி சமையலா் கொழிஞ்சி என்பவரின் மகன் கோபி தரப்பிற்கும் பொதுமக்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சமையல் செய்யும் போது, குழந்தைகளின் உடல்நலனைப் பாதிக்கும் வகையில் சமைத்து விடுவேன் என்று சமையலா் கொழிஞ்சி மிரட்டியதாக பொதுமக்கள் தரப்பில் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதையடுத்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதனிடையே தாரமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், சத்துணவுத் துறை அலுவலா்கள் பழக்காரனூா் பள்ளியில் விசாரணை நடத்தினா். அப்போது சமையலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் அலுவலா்களிடம் மனு அளித்தனா்.