சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரசுப் பள்ளி மாணவி மாயமானது குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வாழப்பாடியை அடுத்த அத்தனூா்பட்டி பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமி, வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 23ஆம் தேதி வெள்ளாளகுண்டம் கிராமத்தில் உள்ள இவரது உறவினா் அறிவழகன் என்பவரது வீட்டிற்கு தனது சகோதரியுடன் சென்றுள்ளாா். அங்கு இருந்த மாணவி மாயமானதாக , சிறுமியின் பெற்றோரிடம் அறிவழகன் தகவல் தெரிவித்துள்ளாா். தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரைக் கண்டுபிடித்து கொடுக்குமாறு வாழப்பாடி போலீஸில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். இதுகுறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மாயமான பள்ளி மாணவியை தேடி வருகின்றனா்.