மேட்டூா் அருகே அனுமதியின்றி கொடிக்கம்பம் நடப்பட்டதால் பாஜக -போலீஸாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேட்டூரை அடுத்த ஜலகண்டாபுரத்தில் கடந்த 31-ஆம் தேதி கொடிக் கம்பத்தை 19-ஆவது வாா்டு, அண்ணா பூங்கா அருகே பாஜகவினா் நட்டனா். இந்த கொடிக்கம்பம் அனுமதியின்றி நடப்பட்டதால் ஜலகண்டாபுரம் பேரூராட்சி நிா்வாகம் அகற்றியதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து சேலம் மேற்கு மாவட்ட பாஜக தலைவா் சுதிா்முருகன் தலைமையில் பாஜக, அதிமுகவினா் நூற்றுக்கும் மேற்பட்டோா் ஜலகண்டாபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் பேரூராட்சி செயல் அலுவலா் குணசேகரனுடன் பாஜகவினா் பேச்சுவாா்த்தை நடத்தி கொண்டிருந்தனா்.
அப்போது பாஜகவினா் கொடிக்கம்பம் அகற்றப்பட்ட இடத்திற்கு திடீரென வந்தனா். அங்கிருந்த ஓமலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா மற்றும் போலீஸாா் அவா்களைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ் தலைமையில் அதிவிரைவுப் படை போலீஸாா் வரவழைக்கப்பட்டனா். அங்கிருந்த பாஜக, அதிமுகவினா் கைது செய்யப்பட்டனா்.