சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், திருவண்ணாமலையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் கல்லூரி மாணவர் பிரபு (22). இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த நவீன் (21). இருவரும் இருசக்கர வாகனத்தில் திருவண்ணாமலை பகுதியில் இருந்து வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு வந்துள்ளனர்.
இதையும் படிக்க | மயிலாடுதுறை: பேருந்து மோதியதில் தந்தை - மகள் பலி
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முத்தம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி புறவழிச் சாலையில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவரது நண்பர் நவீன் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.