சேலம்: சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் சாலையில் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநகர இளைஞர் காங்கிரஸ் சார்பில் மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு சாதனைகள் அல்ல வேதனைகள் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாஸ்கரன் துண்டு பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்க வந்தார்.
அப்போது இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மாவட்ட நிர்வாகிகள் துண்டு பிரசங்கங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மூத்த நிர்வாகிகளை முந்திக்கொண்டு இளைஞர் காங்கிரஸினர் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.
இதனால் கோபமடைந்த மாவட்ட தலைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரும் மாறி மாறி சாலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் பாஸ்கரன் வேகமாக நிகழ்ச்சியை புறக்கணித்து கிளம்பினார்.
காங்கிரஸ் கட்சியினர் சாலையில் மாறிமாறி வாக்குவாதத்துடன் சண்டையில் ஈடுபட்ட காட்சி அப்பகுதி மக்களுக்கு வேடிக்கையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.