தம்மம்பட்டி: ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை அறிவித்த, கெடு தேதி நேற்றுடன் முடிந்ததையடுத்து, தம்மம்பட்டி பகுதியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு விவரங்களை கணக்கெடுக்கும் பணியில், கெங்கவல்லி வருவாய்த்துறையினர், இன்று காலை துவங்கி தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தெடாவூர் - தம்மம்பட்டி நெடுஞ்சாலை, ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அகலப்படுத்தப்பட உள்ளது.
இதையடுத்து, அந்த சாலையின் இருபுறங்களிலும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும், மே 30 ஆம் தேதிக்குள் தாங்களாகவே அகற்றிக் கொள்ளவேண்டும். இல்லையெனில், மறுநாள் மே 31 அன்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனவும், இதனால் ஏற்படும் சகலவிதமான சேதங்கள் மற்றும் விளைவுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களையே சேரும். நெடுஞ்சாலைத்துறை எவ்வித பொறுப்பும் ஏற்காது என, ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை ( மேற்கு) உதவி செயற்பொறியாளர், கடந்த 20 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அறிவிக்கப்பட்டிருந்த கெடு, நேற்று, மே 31 தேதியுடன் முடிந்தது. அதையடுத்து, செந்தாரப்பட்டி (வடக்கு) வி.ஏ.ஓ. வேல்முருகன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், தம்மம்பட்டி பேரூராட்சி கோனேரிப்பட்டியில், நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு விவரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியில், இன்று காலை துவங்கி தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.