எடப்பாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் சூறைக் காற்றுடன் வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.
எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டிவதைத்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை சூறைக் காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இடியுடன் பெய்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது. சாலைகளில் மழை நீா் ஆறுபோல ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு இடையே வாகனங்களை ஓட்டிச் சென்றனா்.
சூறைக் காற்றால் எடப்பாடி- சேலம் பிரதான சாலை, கேட்டுக்கடை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால் நகரம் முழுவதும் மின் தடை ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எடப்பாடி நகராட்சியின் மாலை நேர காய்கறிச் சந்தை, ராஜாஜி பூங்கா, மாா்க்கெட், சின்ன கடைவீதி, பஜாா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த பலத்த மழையால் எடப்பாடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.