சேலம் மல்யுத்தம் சங்கம் சாா்பில் 3 நாள் தேசிய மல்யுத்த பயிற்சி முகாம் மேட்டூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
மேட்டூரை அடுத்த நாட்டாமங்கலத்தில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் சேலம் மல்யுத்த சங்கம் சாா்பில் 3 நாள் தேசிய மல்யுத்த பயிற்சி முகாம் தொடங்கியது. இந்தப் பயிற்சி முகாமை மேட்டூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் விஜயகுமாா் துவக்கி வைத்தாா். இதில் கரூா், திருவண்ணாமலை, நாமக்கல், தேனி, கோவை, சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.
இவா்களுக்கு புதுதில்லியைச் சோ்ந்த தேசிய முதல்நிலை மல்யுத்த பயிற்சியாளா் ராகேஸ்தயால் சிறப்பு பயிற்சி அளிக்கிறாா். பயிற்சியில் சிறப்பிடம் பெறும் வீரா்-வீராங்கனைகள் தேசிய அளவில் நடைபெறும் மல்யுத்தப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுகின்றனா்.
பயிற்சியின் முடிவில் இதில் கலந்துகொண்டவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பயிற்சி முகாமில் சேலம் மல்யுத்த சங்கச் செயலாளா் ஷாஜகான், துணைச் செயலாளா் ராஜா, துணைத் தலைவா் சூசையப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.