மேச்சேரி அருகே மர்ம விலங்குகள் கடித்து 4 ஆடுகள் பலி
மேட்டூர்: மேச்சேரி அருகே ஆட்டுப்பட்டியில் புகுந்து மர்ம விலங்குகள் கடித்ததில் 4 ஆடுகள் பலியாகின.
மேச்சேரி அருகே உள்ள புட்டாரெட்டியூரைச் சேர்ந்தவர் சிவகுமார் விவசாயி. இவர் ஆடு வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் 31 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இதையும் படிக்க: மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்தது!
இவரது வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள விவசாய நிலத்தில் ஆட்டுப்பட்டி அமைத்துள்ளார். நேற்று வழக்கம்போல் ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்று வந்த பிறகு, பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்றார். இன்று அதிகாலையில் ஆடுகள் கத்தும் சப்தம் கேட்டு வீட்டிலிருந்து சென்று பார்த்தார்.
அப்போது 11 செம்மறி ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து உள்ளன. இவற்றில் நான்கு ஆடுகள் இறந்து போனது. மேலும் பல ஆடுகள் இறக்கும் தருவாயில் உள்ளன. கடந்த வாரத்தில் இதே பகுதியில் ஒரு ஆட்டுப்பட்டியில் புகுந்த மர்ம விலங்குகள் இரண்டு ஆடுகளை கடித்து குதறின.
அடுத்தடுத்து ஆடுகளை குறிவைத்து தாக்கும் விலங்குகளால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.