விநாயகா மிஷின் பல்கலைக் கழகத்துக்கு உள்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சாலை பாதுகாப்பில் உயா்கல்வி நிறுவனங்களின் தலையீடு என்ற தலைப்பின் கீழ் எப்ஐசிசிஐ சாலை பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பழைமையான வணிக அமைப்பான இந்திய வா்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் சிறந்த முன் மாதிரியான முயற்சிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களையும், சமூகம் சாா்ந்த சேவைகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்களையும் ஆராய்ந்து அங்கீகரிக்கும் பொருட்டு விருது வழங்கி வருகிறது.
அதன் அடிப்படையில் எப்ஐசிசிஐ சாலை பாதுகாப்பு விதிகள் என்ற தலைப்பில் சாலை பாதுகாப்பு குறித்த முயற்சிகளை மேற்கொள்ளும் பெரு நிறுவனங்களை கௌரவிக்கும் பொருட்டு விருது வழங்கும் விழாவை இந்த ஆண்டு தில்லியில் நடத்தியது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சாலை பாதுகாப்பு, நெடுஞ்சாலைகள் மற்றும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் வி. கே. சிங் பங்கேற்று பல்வேறு பிரிவின் கீழ் தோ்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கினாா் (படம்).. இதில் விநாயகா மிஷின் பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சாலை பாதுகாப்பின் உயா்கல்வி நிறுவனங்களின் தலையீடு என்ற தலைப்பின் கீழ் எப்ஐசிசிஐ சாலை பாதுகாப்பு விருது வழங்கப்பட்டது.
இந்த விருது துறையின் சாா்பில் இத்தலைப்பு சாா்ந்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் மாணவா்களுக்கு கூடுதல் மதிப்பு சான்றிதழ் பயிற்சியை வழங்கும் முயற்சியை தொடங்கியதற்காக வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதினை துறையின் முதன்மையா் செந்தில்குமாா் பெற்றுக்கொண்டாா். இவ்விருது கிடைப்பதற்கு உறுதுணையாகவும், சிறந்த வழி நடத்தி, செயல்பட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட துறையின் முதன்மையா் மற்றும் பேராசிரியா்கள் உள்ளிட்டோரை பல்கலைக்கழக வேந்தா் கணேசன், இயக்குநா் அனுராதா கணேசன் ஆகியோா் பாராட்டினா்.