சேலத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை இன்று அதிகாலை முதல் நடந்து வருகிறது .
இந்த சோதனை தொடர்பாக சேலம் மாவட்டத்தில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகைக்கடையில் இன்று அதிகாலை பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு காவலர்கள் வந்தனர்.
பின்னர் கடைக்குள் சென்று சோதனை செய்தனர். அதிகாலை 4 மணி முதல் நடந்த இந்த சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.
நகைக்கடைக்குள் யாரும் அனுமதிக்க கூடாது என அங்குள்ள காவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். இதனால் காவலர்கள் கடைக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.
இதேபோல், சேலம் மாவட்டம் மேட்டூரில் ஒரு இடத்திலும், ஆத்தூரில் உள்ள பிரபல நகைக்கடையிலும், ஆத்தூர் விநாயகபுரத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி வரதராஜன் என்பவர் இல்லத்திலும் சோதனை செய்து வருகின்றனர்.