வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் பேரூராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.
சேலம் மாவட்டம் பேளூர் பேரூராட்சியில், மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக-6, அதிமுக-6, சுயேச்சைகள்-3 வார்டுகளில் வெற்றி பெற்றனர்.
இதனையடுத்து, தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் கடந்த மார்ச் 4 ந்தேதி அறிவிக்கப்பட்டது. திமுக, அதிமுக வார்டு உறுப்பினர்கள் இடையே தகராறு ஏற்பட்டதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து, சனிக்கிழமை பேளூர் பேரூராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. தலைவர் தேர்தலில் திமுக சார்பில், ஜெயசெல்வி பாலாஜியும் அதிமுக சார்பில் பரமேஸ்வரி சந்துருவும் போட்டியிட்டனர்.
இதில் திமுகவை சேர்ந்த ஜெயசெல்வி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பரமேஸ்வரி 7 வாக்குகள் பெற்றார்.
பேளூர் பேரூராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயசெல்விக்கு சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளர் சக்கரவர்த்தி, ஏற்காடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், பேளூர் நகர திமுக செயலாளர் ராமமூர்த்தி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.