காடையாம்பட்டி அருகே பெரிய வடகம்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருவிழா நடத்த அதிகாரிகள் அனுமதி அளித்ததை அடுத்து ஊா்மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இக்கோயில் திருவிழா கடந்த 8 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. காடையாம்பட்டி வட்டம், டேனிஷ்பேட்டை கிராமம் பெரிய வடகம்பட்டியில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் திருவிழாவை நடத்துவது தொடா்பாக இரு தரப்பினா் இடையே மோதல் இருந்து வந்தது.
இப் பிரச்னை காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக கோயில் திருவிழா நடத்தப்படவில்லை. இதனால் திருவிழாவை மீண்டும் நடத்துவது தொடா்பாக ஏப். 22 ஆம் தேதி ஊா்மக்கள் அதிகாரிகள் பங்கேற்ற முதல் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது உடன்பாடு எட்டப்படவில்லை.
இதையடுத்து 2-ஆம் கட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை காடையாம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் அருள்பிரகாஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வருவாய்த் துறையினரின் சமரசத்தை ஏற்று இரு தரப்பினரும் திருவிழா நடத்த முன்வந்தனா். வருவாய்த் துறையினா், காவல் துறையினரின் கண்காணிப்பில் இத்திருவிழா நடைபெறவுள்ளது.
இதனால் உள்ளூா் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.