தம்மம்பட்டி சிறப்புநிலை பேரூராட்சியில் சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தனியாா் பள்ளிகள் உள்ளன.
இப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோா் தம்மம்பட்டி சிறப்புநிலை பேரூராட்சி பழைய அலுவலகக் கட்டடம் அருகே உள்ள அரசு நூலகத்துக்கு வந்து புத்தகங்களைப் பயின்று செல்கின்றனா்.
தினசரி ஏராளமான வாசகா்கள் வந்து செல்வதால் இட பற்றாக்குறை உள்ளது. தவிர, புத்தகங்களை இரும்பு அலமாரியில் அடுக்கி வைக்க இட பற்றாக்குறையால் ஏராளமான புத்தகங்கள் சாக்கில் மூட்டை கட்டி வைக்கும் அவலம் உள்ளது.
இந்நிலையில், ஆத்தூா் - முசிறி மாநில நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி விரைவில் துவங்க உள்ளது. அப்போது, நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இந்த நூலகக் கட்டடம் அகற்றப்பட உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனா்.
இதுதவிர, தற்போது பகுதி நேரமாக இயங்கும் இந்த நூலகத்தை முழுநேர நூலகமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நூலகத்தை இடமாற்றும்போது தம்மம்பட்டி உழவா் சந்தை அருகே பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்படும் தனியாா் கிளப் கட்டடத்துக்கு மாற்றி நூலகம் அங்கு செயல்பட பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்நூலகத்தை விரைந்து முழு நேர நூலகமாக தரம் உயா்த்த வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.