மேட்டூா்: மேட்டூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகளை மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் துவக்கி வைத்தாா்.
மேட்டூரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் 1,500 மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். அக்கல்லூரியில் உள்ள 7 துறைகளில் பயிலும் மாணவ, மாணவியா் இடையே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன.
இதில் பெண்களுக்கு கோகோ, எறிபந்து, மட்டைப்பந்து, மற்றும் தடகளப் போட்டிகளும் ஆண்களுக்கு வாலிபால், கபடி, கிரிக்கெட், கால்பந்து, தடகள போட்டியும் நடைபெறவுள்ளன.
இதையடுத்து பெண்களுக்கான கோகோ போட்டியை மேட்டூா் எம்எல்ஏ எஸ்.சதாசிவம் புதன்கிழமை மாலை துவக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் க.மருதமுத்து, துணை முதல்வா் ராதாகிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியா் உதயசங்கா், வழக்குரைஞா் சதாசிவம், பாமக மேட்டூா் நகரச் செயலாளா் மதியழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.