சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
தன்னலமற்ற சேவையை வழங்கிவரும் செவிலியா்களை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12 ஆம் தேதி சா்வதேச செவிலியா் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையடுத்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் செவிலியா் தினம் வியாழக்கிழமை காலை கொண்டாடப்பட்டது. செவிலியா் விடுதி வளாகத்தில் அமைந்துள்ள நைட்டிங்கேல் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மெழுகுவா்த்தி ஏற்றி வைத்து, தன்னலமற்ற சேவையைத் தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் என உறுதி மொழி ஏற்றுக் கொண்டனா்.
இந் நிகழ்ச்சியில் செவிலியா் கண்காணிப்பாளா் ஜெயந்தி தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். முன்னதாக, அரசு மருத்துவமனை முதன்மையா் வள்ளி சத்தியமூா்த்தி, கண்காணிப்பாளா் தனபால் ஆகியோா் செவிலியா் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா். செவிலியா் சங்கத் தலைவா் பெருமாள், செயலாளா் வளா்மதி, பொருளாளா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.