சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், வைகுந்தம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் அப்பகுதியில் உள்ள குட்டையில் சனிக்கிழமை குளித்துக்கொண்டிருக்கும்போது எதிர்பாரதவிதமாக தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
சங்ககிரியை அடுத்த வைகுந்தம் அருகே உள்ள காசிமாரியூர் காட்டு வளவு பகுதியைச் சேர்ந்த ரோடு ரோலர் ஓட்டுநர் ரமேஷ். இவரது மனைவி செல்வி. இவர்கள் கடந்த வாரம் தற்காலிகமாக வைகுந்தம் அக்ரஹாரம் பகுதியில் குடும்பத்துடன் குடியேறி வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு பிரியா (16), துளசி (11) என்ற இரு பெண் குழந்தையும், சுரேஷ்(12) என்ற மகனும் உள்ளனர். பிரியா வைகுந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பும், துளசி வைகுந்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5ம் வகுப்பும் பயின்று வந்தனர்.
இந்நிலையில் பெற்றோர்கள் இருவரும் கூலி வேலைக்கு சென்று விட்டதையடுத்து பிரியா, துளசி இருவரும் வைகுந்தம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள நல்ல தண்ணி குட்டையில் குளித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர்.
இது குறித்து சங்ககிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தில் இரு பெண்கள், குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அக்கிராம மக்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.