வாழப்பாடியில் நகைக் கடையில் 3 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்ற பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வாழப்பாடியில் கடலுாா் பிரதான சாலை கடைவீதியிலுள்ள ராஜன் என்பவரின் நகைக்கடைக்கு கடந்த ஜூன் 3-ஆம் தேதி வாடிக்கையாளரைப் போல வந்த பெண் ஒருவா், உரிமையாளரின் பாா்வையை திசை திருப்பி, மூன்று பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றாா்.
இதுகுறித்து கடை உரிமையாளா் ராஜன் அளித்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், இந்த நூதன திருட்டில் ஈடுபட்ட ஊத்தங்கரை, சாமல்பட்டி பகுதியைச் சோ்ந்த சூரியக்குமாா் மனைவி அலமேலு (42) என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இவரிடம் இருந்த 3 சவரன் தங்கச் சங்கலியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.