சேலத்தில் நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்ததால், வெவ்வேறு இடங்களை சேர்ந்த இரண்டு மூதாட்டிகள் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மாலை நேரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதோடு நிலத்தடி நீரும் உயர்ந்துள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் பெய்து வரும் மழையின் காரணமாக வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் விடிய விடிய கண்விழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக, ஏற்காட்டில் இருந்து கீழ்நோக்கி வரும் தண்ணீர் சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வழியாக செல்லும் திருமணிமுத்தாறு கால்வாய்கள் மற்றும் ஓடைகளுக்கு செல்கிறது. இதனால் கால்வாய் ஓடைகளை ஒட்டி உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதன் அடிப்படையில் நேற்று நான்கு ரோடு அருகே உள்ள கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியில் உள்ள ஓடையில் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக அளவு தண்ணீர் வரத்து இருந்ததால், அருகிலுள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதன் அடிப்படையில் கோவிந்த கவுண்டர் தோட்ட பகுதியில் ருக்மணி என்ற மூதாட்டி வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால், வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்துள்ளார் தனிமையில் இருந்த அவர் வேறு வழியில்லாமல் தண்ணீர் மூழ்கி உயிரிழந்து உள்ளார்
அருகில் உள்ளவர்கள் இன்று காலை பார்த்த போது மூதாட்டி தண்ணீரில் மிதந்து இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து காவல் துறைக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
விரைந்து வந்த காவல்துறையினர், மூதாட்டின் பிரதத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் சேலம் சாமிநாதபுரம் பகுதியில் உள்ள டாக்டர் ரத்தினம் தெரு பகுதியில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் 80 வயது பழனியம்மாள் என்ற மூதாட்டி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் மேலும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து அவரது உடலையும் காவல்துறையினர் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு மழை நீரால் சூழ்ந்துள்ள வீடுகளில் இருந்து, மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிக்க: 'வேட்டைக்கு தயாரா ?' - கமலின் பிக்பாஸ் ப்ரமோ விடியோ வெளியானது
சேலத்தில் பெய்த கனமழை காரணமாக அடுத்தடுத்து இரு இடங்களில் இரண்டு மூதாட்டிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.