மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ எல்லை பிடாரி அம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு உற்சவ விழாவை முன்னிட்டு நேற்றிரவு சட்டி சோறு சுமந்து பெண்கள் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து வேண்டுதல் நிறைவேற்றினர்.
மானாமதுரை கஸ்பா கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற இந்த விழா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோயிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் எல்லை பிடாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. விழாவின் முக்கிய வைபவமாக நடைபெற்ற சட்டி சோறு ஊர்வலத்தை முன்னிட்டு மானாமதுரை கஸ்பா கிராமத்தின் கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன், முட்டை, கருவாடு உள்ளிட்ட அசைவ உணவுகளை சமைத்தனர். அதன் பின்னர் இந்த உணவுகளை மண்ணால் செய்யப்பட்ட சட்டிகளில் வைத்து சுட்டிகளை அடுக்கி அதில் விளக்கேற்றி வைத்து பெண்கள் இந்த சட்டிகளை தலையில் சுமந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக புறப்பட்டனர்.
வாண வேடிக்கைகளுடன் நகரின் முக்கிய வீதிகளில் வந்த இந்த சட்டி சோறு ஊர்வலம், பிடாரி அம்மன் கோயிலில் நிறைவு பெற்றது. அங்கு பெண்கள் சட்டி சோறு படையலை எல்லை பிடாரி அம்மனுக்கு படைத்து கிடா வெட்டி பூஜைகள் நடத்தி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணராஜபுரம் பகுதி மக்கள் செய்திருந்தனர்.