சேலத்தில் பிரபல மல்டிபிளக்ஸ் திரையரங்கில் பூச்சி விழுந்த பால் மற்றும் தேதி குறிப்பிடப்படாத உணவு பண்டங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் மணிரத்னம் இயக்கத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்த பொன்னியின்செல்வன் திரைப்படம் இன்று சேலத்தில் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதன்ஒரு பகுதியாக சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கில் பொன்னியின்செல்வன் படம் மூன்று திரைகளில் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் கேண்டினில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், தின்பண்டங்களை வாங்கியபோது தேதி குறிப்பிடப்படாமல் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்து வந்தனர். மேலும் குளிர்சாதனப்பெட்டியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பாலில் பூச்சிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிக்க- ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை!
தகவலின்பேரில் விரைந்து வந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சிவலிங்கம், திரையரங்கில் உள்ள இரண்டு கேண்டின்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டார். அப்போது தேதி குறிப்பிடப்படாமல் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்து வந்த 150 க்கும் குளிர்பானங்கள், 10க்கும் மேற்பட்ட பிஸ்கட் டப்பாக்கள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திரைப்படத்தின் இடைவேளையில் திரையரங்குக்குள் சென்ற உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை ஈடுபடும் போது 50க்கும் மேற்பட்ட லிட்டர் பால் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து திரையரங்கு முன்பாக உள்ள கால்வாயில் கொட்டி அழித்தனர். குறிப்பாக பறிமுதல் செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட லிட்டர் பாலில் இறந்த பூச்சிகள் மிதந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து திரையரங்குக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.