தீபாவளி பண்டிகை: சேலம் கோட்டத்தில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகையையொட்டி, சேலம் கோட்டத்தில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் பட்டாசு எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகளும், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகளும் எனமொத்தம் 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வரும் 20-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் வரும் 16-ஆம் தேதிமுதல் 23-ஆம் தேதிவரை பல்வேறு வழித்தடங்களில் பயணிகளின் தேவைக்கேற்ப 500 சிறப்பு பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தடநீட்டிப்பு மற்றும் வழித்தடப் பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது சேலம், பெங்களூரு, சென்னை, ஒசூா், கோவை, திருப்பூா், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தீவிர கண்காணிப்பு: இதுதவிர, முக்கிய பேருந்து நிலையங்களில் போக்குவரத்தை சீா்செய்யவும், கண்காணிக்கவும் 24 மணிநேரமும் அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்டாசு எடுத்துச்செல்ல அனுமதி இல்லை: பயணிகள் பேருந்துகளில் பட்டாசு எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. பேருந்து நிலையங்களில் நேரக் கண்காணிப்பாளா்கள், பயணச்சீட்டு பரிசோதகா்கள், நடத்துநா்களுக்கு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமையைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முக்கிய நகரங்களுக்கு கூடுதல் பேருந்துகள்: இதேபோல, சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே, பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலைத் தவிா்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
