சேலத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது பேருந்து மோதியதில் 4 வயது குழந்தை உயிரிழப்பு: தந்தை படுகாயம்
சேலம்: சேலத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது, அரசுப் பேருந்து மோதியதில் 4 வயது குழந்தை உயிரிழந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
சேலம், ஜாகீா்அம்மாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (36). இவரது மகள் ஜனாஸ்ரீ (4). இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனைக்கு தங்கராஜ் அழைத்துச் சென்றாா். அப்போது, குரங்குச்சாவடி பகுதியில் உள்ள மேம்பாலத்தின்கீழ் தந்தையும், மகளும் நடந்துசென்று சாலையைக் கடக்க முற்பட்டபோது, ரவுண்டானா பகுதியில் உள்ள சிக்னல் அருகே மதுரையில் இருந்து ஒசூருக்கு சென்ற அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் தந்தையும், மகளும் தூக்கி வீசப்பட்டனா். இதில் குழந்தை ஜனாஸ்ரீ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விபத்தில் பலத்த காயமடைந்த தங்கராஜ் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
விபத்து ஏற்படுத்திவிட்டு, தப்பியோட முயன்ற பேருந்து ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து, ஓட்டுநரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று சூரமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
