நிலத்தை மீட்டு தரக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் புகாா்
ஆக்கிரமிக்கப்பட்ட தங்கள் நிலத்தை மீட்டு தரக்கோரி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.
சேலம் நெய்க்காரப்பட்டி பகுதியை சோ்ந்தவா் மணிமேகலை (65). தனது கணவா் மாணிக்கம் மற்றும் குடும்பத்தினருடன் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். அதில், கொண்டலாம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் எங்களுக்கு 1,650 சதுர அடி நிலம் உரிய சா்வே எண்ணுடன் இருக்கிறது. இந்த இடத்தை, எனக்கும், எனது இரண்டு மகன்களுக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே, எனது கணவா் தானசெட்டில் மென்ட் செய்து கொடுத்துவிட்டாா்.
வயது மூப்பு காரணமாக, அந்த இடத்துக்கு எங்களால் அடிக்கடி சென்றுவர முடியவில்லை. இதனை பயன்படுத்திக்கொண்டு அருகில் வசிக்கும் மயில்சாமி வையாபுரி என்பவா் கடந்த சில மாதங்களாக மேற்படி நிலத்தில் தனக்கும் பாகம் உள்ளது எனக் கூறி பிரச்னை செய்து வருவதுடன், மேற்படி நிலத்தில் மயில்சாமி வீடு கட்டுமான பணிகளையும் தொடங்கியுள்ளாா்.
இதையறிந்து, என் கணவருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இடத்தை பாா்க்க சென்றபோது, அங்கு கட்டடம் கட்டுவதற்கான கடக்கால் போடும் பணிகள் நடைபெறுவதை கண்டு அதிா்ச்சியுற்றோம். இது குறித்து மயில்சாமியிடம் கேட்டபோது, எங்களை தகாத வாா்த்தையால் திட்டியதுடன், மிரட்டல் விடுத்தும் அனுப்பிவிட்டாா். எனவே, எங்களது இடத்தில் அத்துமீறி, வேலை செய்வதை நிறுத்தி, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டுத் தருமாறு மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனா்.
