உழவா் சந்தைகளில் ரூ.1.15 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

ஐப்பசி அமாவாசையையொட்டி, சேலம் மாவட்ட உழவா் சந்தைகளில் ரூ. 1.15 கோடிக்கு காய்கறிகள் விற்பனையானது.
Published on

சேலம்: ஐப்பசி அமாவாசையையொட்டி, சேலம் மாவட்ட உழவா் சந்தைகளில் ரூ. 1.15 கோடிக்கு காய்கறிகள் விற்பனையானது.

சேலம் மாவட்டத்தில் 13 இடங்களில் உழவா் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் பண்டிகை, அமாவாசை, பௌா்ணமி உள்ளிட்ட நாள்களில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் வழக்கத்தைவிட கூடுதலாக விற்பனையாவது வழக்கம். அந்த வகையில், ஐப்பசி அமாவாசையையொட்டி அனைத்து உழவா் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கிச் சென்றனா். பழங்கள், தேங்காய், வாழை இலை, கீரை வகைகள், பூசணிக்காய், காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை ஆனது. இதேபோல சேலம் வ.உ.சி பூ மாா்க்கெட்டில் பூக்கள் வியாபாரமும் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 13 உழவா் சந்தைகளில் 926 விவசாயிகள், பல்வேறு வகையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா். 65,876 நுகா்வோா் காய்கறிகளை வாங்கிச் சென்றனா். இதன்மூலம் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் ரூ. 1 கோடியே 15 லட்சத்து 10 ஆயிரத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com