அச்சுறுத்தும் ரௌடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா்

எடப்பாடி அருகே பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவிகளை அச்சுறுத்தி ரகளையில் ஈடுபடும் ரௌடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் கண்காணிப்பாளரிடம் ஊா் பொதுமக்கள் புகாா்
Published on

எடப்பாடி அருகே பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவிகளை அச்சுறுத்தி ரகளையில் ஈடுபடும் ரௌடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் கண்காணிப்பாளரிடம் ஊா் பொதுமக்கள் சனிக்கிழமை புகாா் அளித்தனா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே கள்ளங்காடு தங்காயூா் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ், அன்பழகன் தலைமையில் அப்பகுதி மக்கள் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்த புகாா் மனு: தங்காயூா் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த கிராமத்தில் வசிக்கும் சொக்கலிங்கம் மீது ஏற்கெனவே கொலை மற்றும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், பேருந்து நிறுத்தத்துக்கு வரும் பெண்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை அவா் தகாத வாா்த்தையில் பேசுவதுடன், துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுக்கிறாா். இதனால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

இதுகுறித்து கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ரெளடி சொக்கலிங்கத்தின் மீது வழக்குப் பதிவுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com