மதுரை, மார்ச் 22: மதுரை மாவட்டத்தின் ஆட்சியராக உ.சகாயம் (48) (படம்) செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
மதுரை ஆட்சியராக இருந்த சி.காமராஜ், தேர்தல் ஆணையத்தால் ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக, புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் உ.சகாயம் மதுரை ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை உ.சகாயம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொறுப்பேற்றார். அவரிடம் சி.காமராஜ் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த இவர் எம்.ஏ. (சமூக சேவை), பி.எல். படித்தவர். 2001-ல் ஐ.ஏ.எஸ். அந்தஸ்து பெற்றவர். மாநில தேர்தல் ஆணையச் செயலராகவும், குடிமைப் பொருள் வழங்கல் துறை இணை ஆணையராகவும், நாமக்கல் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார்.
புதிய ஆட்சியருக்கு வருவாய் அலுவலர் பா.முருகேஷ், திட்ட இயக்குநர் சாமுவேல் இன்பராஜ், துணை கமிஷனர் தர்ப்பகராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.