குடிசைத் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பினர் ஆலோசனை
சாத்தூர், பிப். 10: அகில இந்திய குடிசைத் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சாத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பரமசிவம் முன்னிலை வகித்தார்.
மார்ச் மாதம் 16-ம் தேதி புதிய நிர்வாகிகள் தேர்தல் நடத்துவது எனக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள 10 குழுமங்கள் மற்றும் சங்கங்களைச் சேர்ந்த 63 புரவலர்கள், இயக்குநர்கள் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சாத்தூர் தீப்பெட்டிக் குழுமத்தின் இயக்குநர் மகேந்திரன், உலகமயமான பின்னர் போட்டியை எதிர்கொள்ள குழுமமாகச் செயல்பட வேண்டிய அவசியத்தையும், குழுமத் திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தரும் மானியங்கள் பற்றியும் விளக்கினார்.
குழுமத்தின் பொறுப்பாளர் லால் சௌந்திரபாண்டியன் நன்றி கூறினார்.