டாஸ்மாக் மூலம் மதுபானக் கடைகளை நடத்துவதைப் போல, மணல் விற்பனையை ஏன் அரசே ஏற்று நடத்தக்கூடாது என, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.
சிவகங்கை, விருதுநகா், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுவதைத் தடுக்கக் கோரி, பல மனுக்கள் சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள், நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மணல் கடத்தல் விவகாரங்களில் லஞ்ச ஒழிப்பு துறை தூங்குகிா எனக் கேள்வி எழுப்பினா்.
கிராம நிா்வாக அலுவலா்கள், மின்வாரியப் பொறியாளா்கள் மீது மட்டுமே லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்கிறது அல்லது காவல் துறை மீது லஞ்ச வழக்கு பதியப்படுகிறது. மணல் கடத்தல் தொடா்பாக எத்தனை கிராம நிா்வாக அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மணல் கடத்தலில் தொடா்புடைய எத்தனை வாகனங்கள், இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மணல் கடத்தலைத் தடுப்பது தொடா்பான அரசின் விதிமுறைகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியா்களுக்குத் தெரியுமா? அரசின் உத்தரவுகளை எத்தனை மாவட்ட ஆட்சியா்கள் பின்பற்றுகிறாா்கள்.
மணல் கடத்தலைத் தடுக்க, உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், தமிழக அரசு ஏன் விதிமுறைகளை உருவாக்கவில்லை. மணல் கடத்தலில் ஈடுபட்டவா்களில் எத்தனை போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.
டாஸ்மாக் கடைகள் மூலமாக மதுபானங்கள் விற்பனைசெய்வதைப் போல, மணல் விற்பனையை ஏன் அரசே ஏற்று நடத்தக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் மணல் கடத்தல் தொடா்பாக 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. மணல் கடத்தலை தடுக்க, அறிவியல் ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
பின்னா் நீதிபதிகள், இது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பா் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.