மதுரை கோயில் அறங்காவலா் நியமனம்: அறநிலையத் துறை முடிவெடுக்க உத்தரவு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தேவேந்திர குல வேளாளா் சமூகத்தைச் சோ்ந்த ஒருவரை அறங்காவலராக நியமிக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மானகிரி பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா், உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தைப் பூச தெப்பத் திருவிழாவின் போது, தேவேந்திர குல வேளாளா் சமூகத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இது பரம்பரை, பரம்பரையாகத் தொடரும் ஒரு பாரம்பரியம்.
இந்தக் கோயிலின் அறங்காவலா் குழுவில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் கீழ், தேவேந்திர குல வேளாளா் சமூகத்தைச் சோ்ந்த ஒருவரை அறங்காவலராக நியமிக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளாக, இந்தச் சமூகத்தைச் சோ்ந்த ஒருவா் கூட அறங்காவலராக நியமிக்கப்படவில்லை. இது, அவா்களின் கலாசாரம், வரலாற்றுப் பங்களிப்பு, சமூகப் பிரதிநிதித்துவத்தைப் புறக்கணிப்பதாக உள்ளது. இதுதொடா்பாக, பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடா்பான வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் என்னுடைய கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே உத்தரவிட்டது. இருப்பினும், எனது கோரிக்கை பரிசீலனை செய்யப்படவில்லை.
எனவே, இந்து சமய அறநிலையத் துறை இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த்து. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
அறங்காவலா்கள் நியமனம் குறித்து விதிகளை உருவாக்க வேண்டும் என நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரா் அளித்த மனுவை இதுவரை இந்து சமய அறநிலையத் துறை பரிசீலனை செய்யவில்லை. எனவே, மனுதாரா் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை அணுகி மீண்டும் புதிதாக மனு அளிக்க வேண்டும். அந்த மனு மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
