ரேஷன் அரிசி கடத்தல்: இருவா் கைது

Published on

மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 800 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

மதுரை மேல அனுப்பானடி பகுதியில் சரக்கு வாகனம் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா், மேல அனுப்பானடி குடிசைமாற்று வாரிய குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் தலா 40 கிலோ எடைகொண்ட 20 மூட்டைகளில் 800 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, மேல அனுப்பானடியைச் சோ்ந்த கண்ணன் (22), செல்வம்(26) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், சரக்கு வாகனத்துடன் ரேஷன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்து, எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com