திண்டுக்கல் அடுத்துள்ள கொசவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு தண்ணீர் சிக்கனம் குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) சார்பில் நடைபெற்ற நீர் மேலாண்மை தொடர்பான பயிற்சி முகாமுக்கு, நபார்டு வங்கியின் துணை பொது மேலாளர் என். நாகராஜன் தலைமை வகித்தார். உதவிப் பொது மேலாளர் எல். சஞ்சீவி முன்னிலை வகித்தார். பயிற்சியின்போது, தண்ணீர் சிக்கனம் மற்றும் சேமிப்பின் அவசியம் குறித்தும், வேளாண்மையில் நவீன கருவிகளை பயன்படுத்துவது குறித்தும், தண்ணீர் தூதுவர்கள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், சொட்டு நீர்ப் பாசனம், நுண்ணீர் பாசனம், இயற்கை விவசாயம், நிலப் போர்வை அமைத்தல், பசுமை குடில் அமைத்தல் ஆகியவற்றின் மூலம் தண்ணீர் சிக்கனம் மட்டுமின்றி பொருளாதார சிக்கனமும் சாத்தியமாகும் என வலியுறுத்தப்பட்டது. முன்னதாக, கொசவப்பட்டியில் உள்ள கல்குத்து குளத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றி, அங்குள்ள வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்கும் பணிகளையும் தண்ணீர் தூதுவர்கள் குழு மேற்கொண்டது.
நிகழ்ச்சியில், கனரா வங்கியின் நிதி ஆலோசகர் எம். சிவசுப்பிரமணியம், வேளாண்மை உதவி இயக்குநர் இளங்கோ மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.