பழனியை அடுத்த அழகாபுரியில் புதன்கிழமை மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
பழனியில் இருந்து கொழுமம் வழியாக உடுமலை செல்லும் வழியில் உள்ள அழகாபுரியில் மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கடைக்கு சின்னக்கலையமுத்தூர், அ.கலையமுத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வந்து பலர் மது வாங்குவதாகவும், இதனால் அப்பகுதி வழியாக பெண்கள், மாணவ- மாணவிகள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த மதுக்கடையை இடமாற்றக் கோரி அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீஸார் அவர்களை அங்கிருந்து அகற்ற முயன்றனர். பின்னர் அனைவரும் பழனி- கொழுமம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு வந்த டிஎஸ்பி. வெங்கட்ராமன், வருவாய்த்துறை அலுவலர்கள் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மதுக்கடையை இடமாற்றம் செய்ய ஏற்பாடு செய்வதாக தெரிவித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.