மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குவோர், துப்புரவுத் தொழிலாளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சம்மேளனம், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குவோர் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த அக்டோர் 11ஆம் தேதி, உள்ளாட்சி தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, துப்புரவுப் பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.355, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குவோருக்கு ரூ.432 வீதம் குறைந்தபட்ச ஊதியம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை அந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை எனக் கூறி, சிஐடியூ தொழிற்சங்கத்தினர் மனு அளிக்கும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, சிஐடியூ தொழிற்சங்க நிர்வாகி கே.ஆர். கணேசன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்ட தொழிலாளர்கள், பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.