கொடைக்கானலில் பாதரச தொழிற்சாலை முன்னாள் பணியாளர்கள் உண்ணாவிரதம்
கொடைக்கானலில் பாதரச தொழிற்சாலை முன்னாள் பணியாளர்கள் சங்கம் சார்பில் நஷ்டஈடு வழங்கக் கோரி புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
கொடைக்கானல் செயிண்ட்மேரீஸ்சாலையில் ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் பாதரச தெர்மா மீட்டர் தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த 1984-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்த பணியாளர்கள் பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்டு இறந்ததாக எழுந்த புகாரையடுத்து கடந்த 2001-ஆம் ஆண்டு இத்தொழிற்சாலை மூடப்பட்டது.
இந்நிலையில் தொழிற்சாலையில் வேலை பார்த்த தொழிலாளர்கள் தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனக் கோரி பல ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தையடுத்து கடந்த 4ஆண்டுகளுக்கு முன் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
இந்நிலையில் இழப்பீடு பெறாத முன்னாள் பணியாளர்கள் தங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டுமென கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானலிலுள்ள ஹிந்துஸ்தான் நிறுவனம் முன் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய முன்னாள் பணியாளர்கள் 400-க்கும் மேற்பட்டவர்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:இத்தொழிற்சாலையில் பணிபுரிந்த அனைவருக்கும் நிர்வாகம் இழப்பீடு தரவேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டம் நடைபெறும் என்றனர்.