திண்டுக்கல் மண்டல அளவிலான குடியரசு தின, பாரதியார் தின தடகளப் போட்டியில், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 452 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில், பழனி, திண்டுக்கல், உத்தமபாளையம், பெரியகுளம் (பழைய கல்வி மாவட்டம்) கல்வி மாவட்டங்களிலிருந்து குறுவட்ட மற்றும் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று, மண்டல அளவிலான தடகளப் போட்டிகளுக்கு தகுதி பெற்ற 452 மாணவர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இப் போட்டிகளை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கு.சொ. சாந்தகுமார் தொடக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக, திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் கே. சக்திவேல், ஹாக்கி சங்கத் தலைவர் என்.எம்.பி. காஜாமைதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், கோலூன்றி தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், நீளம் தாண்டுதல், 5ஆயிரம் மீ. ஓட்டம், 3ஆயிரம் மீ. ஓட்டம், 800 மீ., 600 மீ., 400 மீ. ஓட்டம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
ஒவ்வொரு போட்டியிலும் முதல் 2 இடங்களைப் பெற்ற மாணவர்கள், மாநில அளவிலான குடியரசு தின, பாரதியார் தின தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை, திண்டுக்கல் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் த. ராஜதிலகம் செய்திருந்தார்.