கொடைக்கானல் அருகே நாயுடுபுரம் பகுதியிலுள்ள புனித ஆரோக்கியமாதா கோயில் திருவிழாவையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் 33-ஆவது ஆண்டுத் திருவிழா கடந்த 31- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் திருப்பலி மற்றும் ஜெபவழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை மின் அலங்காரத் தேர்ப்பவனி, சிறப்புத் திருப்பலி மற்றும் ஜெப வழிபாடுகள் நடைபெற்றன.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆரோக்கிய மாதா சப்பர பவனி நடைபெற்றது. நாயுடுபுரம், ரைபிள்ரேஞ் ரோடு, வில்பட்டி சாலை, பச்சைமரத்து ஓடை, சின்னப்பள்ளம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக இந்த சப்பர பவனி நடந்தது.
இதில் கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை பாக்கியபுரம் பங்குத் தந்தை அடைக்கலராஜ் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.