கொசவப்பட்டி அருகே சேதமைடந்துள்ள நத்தம் பிரதான சாலையை துரிதமாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பிரதான சாலையில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ளன. அதேபோல், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள நகரங்களுக்கும் இந்த பிரதான சாலை வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திண்டுக்கல் அடுத்துள்ள விராலிப்பட்டி முதல் கொசவபட்டி இடையிலான சாலை மிகவும் சேதமடைந்து, குண்டும் குழியுமாக மாறிவிட்டது. சேதமடைந்துள்ள இச்சாலை அருகே ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியும் செயல்படுகின்றன.
நோயாளிகள் மற்றும் மாணவர்கள், குண்டும் குழியுமான இந்த சாலையை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதனால், இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பு செயலர் மு. முருகேசன் தெரிவித்துள்ளது:
நத்தம் சாலையில் பேருந்துகளில் பயணிப்போரை விட இரு சக்கர வாகனத்தில் செல்வோரின் எண்ணிக்கை அதிகம். கொசவப்பட்டி பகுதியில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் விபத்து அபாயம் உள்ளது. நத்தம்-மதுரை நான்குவழிச் சாலை திட்டத்துக்கு முன்னதாக, இதுபோன்ற சேதமடைந்த சாலைகளை துரிதமாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.