கொடைக்கானலில் சாலைகள் சேதமடைந்துள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கொடைக்கானல் பகுதிகளான ஆனந்தகிரி, செண்பகனூர், தைக்கால், பிரகாசபுரம், ஐயர் கிணறு, அப்சர்வேட்டரி, வில்பட்டி, பள்ளங்கி, மாட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்றுள்ளன.
இந்த சாலைகள் அமைத்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், முறையான பராமரிப்பு இல்லாததால் சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாகி மழைக் காலங்களில் தண்ணீர் தேங்குகிறது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.
எனவே, நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சாலையை செப்பனிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இதேபோல மேல்மலைக் கிராமங்களிலும் சாலைகள் சேதமடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இப்பகுதிகளில் தனியார் பேருந்துகள் மட்டுமே செல்கின்றன. இதனால், கூடுதலாக கட்டணம் செலுத்தவேண்டிய நிலை உள்ளதாக, மலைவாழ் மக்கள் புகார் கூறுகின்றனர்.