கொடைக்கானல் உகார்த்தே நகர்ப் பகுதியிலுள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இவ்விழாவுக்கு பங்குத் தந்தை பீட்டர் சகாயராஜா தலைமை வகித்தார். நிலக்கோட்டை புனித குழந்தையேசு கோயில் பங்குத் தந்தை அற்புதராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அற்புத குழந்தையேசு ஆலயத்திலிருந்து மந்திரிக்கப்பட்ட புனித ஆரோக்கிய மாதா கொடியை பவனியாக கிறிஸ்தவர்கள் எடுத்துச் சென்றனர்.
தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் அன்பியங்கள் சார்பில் திருப்பலி மற்றும் ஜெபவழிபாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத் தந்தை மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர். கொடியேற்ற நிகழ்ச்சியில் கொடைக்கானல் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.