ஆத்தூரில் வாகனச் சோதனை: தேங்காய் வியாபாரியிடம் ரூ.1.20 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 04th April 2019 07:37 AM | Last Updated : 04th April 2019 07:37 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, உரிய ஆவணமின்றி தேங்காய் வியாபாரி எடுத்துச் சென்ற ரூ.1.20 லட்சத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
அய்யம்பாளையம் அருகேயுள்ள தேவரப்பன்பட்டியைச் சேர்ந்தவர் வீரராஜ்(58). தேங்காய் வியாபாரி. திண்டுக்கல் சந்தைக்கு தேங்காய் கொண்டு வந்த இவர், மீண்டும் தேவரப்பன்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சென்றார்.
அப்போது ஆத்தூர் கோழிப்பண்ணை அருகே, துணை வட்டாட்சியர் மனோகரன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த, வீரராஜை வழிமறித்து சோதனையிட்ட போது, அவர் ரூ.1.20 லட்சம் எடுத்துச் செல்வது தெரிய வந்தது.
ஆனால், அந்த பணத்திற்குரிய ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லாததால், அந்தப் பணத்தை பறிமுதல் செய்து ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.