பழனி அருகே புதன்கிழமை ஜீப் மரத்தில் மோதி பால் வியாபாரி உயிரிழந்தார்.
பழனியை அடுத்த வயலூரைச் சேர்ந்த பால் வியாபாரி சின்னப்பன்(50). இவர் புதன்கிழமை தனது நண்பர்கள் செல்வராஜ் (45), ரத்தினமூர்த்தி (50), ராமசாமி (40), தங்கவேல் (44), கனகராஜ் (45) ஆகிய ஆறு பேரும் ஜீப்பில் திருச்சி மாவட்டம், மணப்பாறை வீரப்பூர் கோயிலுக்குச் சென்றனர். சுவாமி தரிசனம் செய்து விட்டு பிற்பகலில் ஊர் திரும்பினர்.
பழனி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கணக்கன்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென வாகனத்தின் முன்புற டயர் வெடித்ததில் நிலைத் தடுமாறி அருகே இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜீப்பில் பயணம் செய்த சின்னப்பன் (50) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 5 பேரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த 2 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து சத்திரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.