பழனி அருகே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரிப்பின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பிரசாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு கிளம்பினார்.
பழனியை அடுத்த புதுஆயக்குடியில் ஞாயிற்றுக்கிழமை மாலை திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர் வேலுச்சாமிக்கு ஆதரவாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் மேற்கொண்டார். பழனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நடுவே பிரசார வேனை நிறுத்தி வைகோ பிரசாரம் மேற்கொண்டார். அப்போது
வேட்பாளர் இல்லாத நிலையில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, ஒட்டன்சத்திரம் எம்எல்ஏ சக்கரபாணி ஆகியோர் உடனிருந்தனர். சாலையின் நடுவே பிரசார வேன் இருந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக செல்ல காத்திருந்த இளைஞர்கள் இடைவிடாமல் வாகனங்களில் ஒலி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. உடனே வைகோ பிரசாரத்தை பாதியில் முடித்து விட்டு புறப்பட்டார்.