முன்னாள் முதல்வர் கருணாநிதியாலேயே முடியாதபோது, மு.க.ஸ்டாலினால் அதிமுகவை அசைக்கவே முடியாது என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு ஆதரவாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நத்தம், கோபால்பட்டி மற்றும் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை வாக்குகள் சேகரித்து பேசியதாவது:
அதிமுகவுக்கு எதிராக முன்னாள் முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து, இந்த இயக்கம் ஆலமரமாக பரந்து விரிந்து வளர்ச்சிப் பெற்றுள்ளது. சுனாமி, புயல், பூகம்பம் என எது வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது.
கருணாநிதியால் முடியாதபோது, மு.க.ஸ்டாலினால் அதிமுகவை அழிக்கவோ, அசைக்கவோ முடியவே முடியாது. கனவில் கூட மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியாது.
அவர் போடும் வேஷங்கள் பலிக்காது. ஜெயலலிதா இருந்தபோது, அதிமுக வேட்பாளருக்கு கிடைத்து வந்த ஆதரவு, தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களும், காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட தமிழக உரிமையை மீட்பதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளும், அதிமுகவுக்கு வெற்றியைத் தேடித் தரும் என்றார்.
நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், அதிமுக மாவட்டச் செயலர் மருதராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.