பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இலவச இணைப்பு பெற தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
திண்டுக்கல் மாவட்டத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் தகுதியுள்ள நபர்களுக்கு ஒரு உருளை (சிலிண்டர்) பயன்படுத்துவதற்கான எரிவாயு இணைப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், இதுவரை பயன்பெறாதவர்கள், சாதிச் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் அருகிலுள்ள எரிவாயு நிறுவனத்திடம் விண்ணப்பம் அளித்து புதிய இணைப்பு பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தில் ரூ.1000 மதிப்புள்ள எரிவாயு அடுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. வைப்புத் தொகை ரூ.1,500 செலுத்த இயலாதவர்கள், உருளைக்கான மானியத் தொகையில் இருந்து அதனை ஈடு செய்துகொள்ள சம்மதம் தெரிவித்தால், முதன்முதல் பெறும் உருளைக்கான தொகையினை மட்டும் செலுத்தி புதிய இணைப்பு பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவோருக்கு காப்பீட்டு அட்டை மற்றும் பாதுகாப்பு அட்டை வழங்கி, பாதுகாப்பாக எரிவாயு அடுப்பு மற்றும் உருளையை கையாள்வது குறித்து சம்பந்தப்பட்ட எரிவாயு முகவர் மூலம் செய்முறை விளக்கம் அளிக்கப்படும். உஜ்வாலா திட்டத்தின்கீழ் புதிய இணைப்பு பெறும் ஏழை, எளியவர்களின் நலனை கருத்தில் கொண்டு, 5 கிலோ எடையுள்ள உருளை ஒன்று ரூ.250-க்கு வழங்கப்படுகிறது.
இது குறித்த அறிவிப்பினை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவர்களும் பொதுமக்களின் பார்வையில் நன்கு தெரியும் வகையில், கடையின் முன்பு காட்சிப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.