ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் சீராக குடிநீர் விநியோகிப்பது குறித்து, மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகிப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், ஒட்டன்சத்திரம் ஊராட்சிக்குள்பட்ட சத்திரப்பட்டி பகுதியில் குடிநீர் விநியோகத்தை சீர் செய்யும் பொருட்டு, அப்பகுதியில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அதில், மின்மோட்டார் பழுது, குழாய் இணைப்புகளில் உள்ள பழுது ஆகியவற்றைக் கண்டறிந்து சீராக குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவும் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், பழுதடைந்துள்ள ஆழ்துளைக் கிணறுகளை சீரமைத்து, அதன்மூலம் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும், விருப்பாச்சியில் வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகளை, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்கள் மூலம் மக்கும்-மக்காத குப்பை எனத் தரம் பிரித்தல், மண்புழு உரம் தயாரிக்கும் பணியையும், நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருள்களின் இருப்பு விவரம் மற்றும் பதிவேடுகள் குறித்தும், அம்மா பூங்கா, நாற்றங்கால் பண்ணை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் விநியோகம் குறித்து, நகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் கவிதா, ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையர் தேவிகா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.