மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் திண்டுக்கல் மாநகராட்சி நேருஜி நினைவு நகரவை மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி பேசியதாவது: பிறப்பு முதல் 18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை ஆய்வு செய்வதற்கான சிறப்பு மருத்துவ முகாம் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 14 வட்டாரங்களிலும் தனித்தனியாக நடைபெறுகிறது. மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் 18 வயது வரை மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பயிற்சி பெறுகின்றனர். இக்குழந்தைகளுக்குத் தேவையான நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, புதிய அடையாள அட்டை வழங்குதல், உதவி உபகரணங்கள் வழங்குதல் மற்றும் அறுவைச் சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்காக இந்த சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது என்றார். முகாமில், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மாலதிபிரகாஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.