பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூரில் உள்ள பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் 50 ஆவது ஆண்டு பேரவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி செயலரும், பழனிக்கோயில் துணை ஆணையருமான(பொறுப்பு) செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பேரவை துணைத் தலைவர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். பழனிக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தலைமை வகித்து பேசியது: கிராமப்பகுதி பெண்களின் மேம்பாட்டுக்காக தொடங்கப்பட்ட இக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் போதிய அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. பல்கலைக் கழக அளவில் பல்வேறு போட்டிகளிலும் விருது பெற்று சிறப்பு சேர்த்துள்ள இக்கல்லூரியில் மேலும், புதிய கட்டடங்கள் கட்ட மதிப்பீடுகள் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும் என்றார். கோவை பாரதியார் பல்கலைக் கழக பொருளியல் பேராசிரியர் சங்கமித்ரா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது நவீன யுகத்தில் பெண்கள் தங்கள் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். செல்லிடப்பேசிகளில் தங்கள் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்றார்.
விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பேராசிரியைகள் வசந்தி, வனிதா, ஜெயபாரதி உள்ளிட்டோர் செய்திருந்தனர். முன்னதாக கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி வரவேற்றார்.