சாணார்பட்டி அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள ஆண்டியபட்டியில் உள்ள மகாலெட்சுமி கோயிலில், ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், ஸ்ரீவிநாயகர் மற்றும் நவ மூர்த்தி தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, மகாலட்சுமி கோயில் முன்புறமுள்ள கம்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். பின்னர், விரதமிருந்து வந்த பக்தர்கள் 20-க்கும் மேற்பட்டோர் தங்களது தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
முன்னதாக, சிறப்பு அலங்காரத்தில் மகாலட்சுமி அம்மன் முக்கிய வீதிகள் வழியாக பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.